கோவை : தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 4-வது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நெட்டின்சன்கள் இவர்களது போராட்டத்தை கிண்டல் செய்து பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
கோவை : தமிழகம் முழுவதும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 4-வது நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், நெட்டின்சன்கள் இவர்களது போராட்டத்தை கிண்டல் செய்து பல்வேறு மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஆசியர்கள் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ ஜியோ அமைப்பினர், கடந்த 22-ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தினால், பல்வேறு மாவட்டங்களில் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தைக் கைவிட்டு விட்டு, மீண்டும் பணிக்கு திரும்புமாறு சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் மாறி மாறி உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும், அரசு ஆசிரியர்கள் பிடிவாதமாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் செயல்பட்டு வந்தாலும், நெட்டின்சன்கள் இந்தப் போராட்டத்தை கடுமையாக விமர்சித்து கருத்துக்களையும், மீம்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்பாக, அரசு ஆசிரியர்களுக்கு 2019-ம் ஆண்டு ஏற்றாற் போல ஊதியம் வேண்டுமாம், ஆனால், ஓய்வூதியம் மட்டும் 2003-க்கானது தேவைப்படுகிறதோ.. என்ற கேள்வியும், எந்த அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள், அரசு பள்ளிகளில் பயில்கிறது என்ற விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

அதேவேளையில், 5-ம் வகுப்பு எடுக்கும் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு 80 ஆயிரம் வரை ஊதியம் கிடைப்பதாகவும், ஆசிரியர்களுக்கு பணி நாட்களை விட விடுப்பு நாட்களே அதிகம் என்பதைப் போன்ற மீம்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பறக்கவிடுகின்றனர்.

மேலும், மக்களின் வரிப்பணத்தில் பெரும் தொகை அரசு ஆசிரியர்களுக்கே செல்வதாகக் கூறும் நெட்டின்சன்கள், இதுவும் போதாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபடுவது ஏற்புடையதாக இல்லை எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பினரின் கோரிக்கைகள் :-
* 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்தோருக்கும், பழைய ஓய்வூதியத் திட்டத்தையே அமல்படுத்த வேண்டும்,
* இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும்.
* சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சிச் செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள்ளிட்டோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் அளிக்க வேண்டும்
* 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்
* 5.000 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்
* 3,500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தை கைவிட வேண்டும்